மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை


மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 7:01 PM GMT)

மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் என திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் தட்சிணாமூர்்த்தி தலைமையில் நிர்வாகிகள், திருவாரூர் வந்த தென்னக ரெயில்வே பொது மேலாளர்் குல்ஸ்ரஷ்தாவை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் என்ஜின் மறுதிசைக்கு மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலை, மாலை இரு வேளைகளிலும் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக ரெயில்வே கேட் மூடப்படுவதால் தஞ்சை- நாகை சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பஸ் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே ரெயிலின் என்ஜினை நீடாமங்கலத்தில் மாற்றம் செய்யாமல் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து, திருவாரூர் ரெயில் நிலையத்தில் என்ஜினை மாற்றம் செய்ய வேண்டும். இதேபோல் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு முன்பாகவும், திருச்சியிலிருந்து திருவாரூருக்கு மாலை 4 மணிக்கு பிறகும் ரெயில் வசதி இல்லாமல் உள்ளது. எனவே இந்த நேரத்தில் ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மயிலாடுதுறை- விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில்- வேளாங்கண்ணி, கொல்லம்- வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். நாகூர்-கொல்லம் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். திருவாரூர்் ரெயில் நிலையத்தில் முகப்பு வளைவு ஏற்படுத்தி தர வேண்டும். திருவாரூர் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story