நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல் 97 பேர் கைது


நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல் 97 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:37 PM GMT)

நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 97 பேரை போலீசார் கைது செய்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பொதுமக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்தனர். இதையடுத்து அரசு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கி வருகிறது. இதையடுத்து துவார் ஊராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புயல் பாதித்து 3 மாதங்கள் ஆகியும் நிவாரண பொருட்கள் வழங்க வில்லை.

இதை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் துவார் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஊராட்சி செயலாளர் தங்கமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் உடையப்பன், துரைச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுந்திரமூர்த்தி, தே.மு.தி.க. ஒன்றிய குழு டைலர் ரெங்கராஜ், ம.தி.மு.க.வை சேர்ந்த மருதமுத்து, அ.ம.மு.க.வை சேர்ந்த ரெங்கராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 97 பேரை ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 97 பேரையும் மழையூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 

Next Story