வேப்பந்தட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த கர்ப்பிணி கொலையா? போலீசார் விசாரணை


வேப்பந்தட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த கர்ப்பிணி கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 7:56 PM GMT)

வேப்பந்தட்டை அருகே கர்ப்பிணி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). லாரி கிளனர். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பார்வதிக்கும்(20) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து கர்ப்பமான பார்வதி கடந்த நான்கு மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம்போல் மணிகண்டன் வேலைக்கு வெளியூர் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த பார்வதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் பார்வதியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தேடியபோது, அங்குள்ள கிணற்றில் பார்வதி பிணமாக மிதந்தார். இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து பார்வதி உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பார்வதியின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதி தற்கொலை கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் உடலை வீசி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்வதிக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story