திருச்சி–காரைக்கால் இடையே மின்சார ரெயில் சேவை, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது


திருச்சி–காரைக்கால் இடையே மின்சார ரெயில் சேவை, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 5:13 PM GMT)

திருச்சி–காரைக்கால் இடையே அடுத்த மாத இறுதியில் மின்சார ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வருகிறது. இதற்காக தஞ்சை பகுதியில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் வழித்தடம் பழமை வாய்ந்தது ஆகும். முன்பு இந்த வழியாகத்தான் சென்னை போன்ற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன. அப்போது தஞ்சை வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி– விழுப்புரம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன. விழுப்புரம்–தஞ்சை வழித்தடம் 2–வது வழித்தடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை வழியாக ரெயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டன.

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றன. இந்த பகுதியில்தான் தஞ்சை பெரிய கோவில், கல்லணை, அரண்மனை, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற புண்ணிய தலங்களும் உள்ளன. இதனால் இந்த வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.


இதையடுத்து தற்போது தஞ்சை வழியாக 15–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், வேளாங்கண்ணி, திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், எர்ணாகுளம், திருநெல்வேலி, ராமேசுவரம், கோயம்புத்தூர், சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, திருச்செந்தூர், வாரணாசி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை–திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இதையடுத்து திருச்சி–காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது.


தஞ்சை–திருச்சி இடையே இருவழிப்பாதை என்பதால் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தஞ்சை–திருச்சி இடையே இருவழிப்பாதையிலும், ஒருவழிப்பாதைக்கு தலா 1,200 உயர் அழுத்த மின் கோபுரங்கள் என 2,400 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது தஞ்சை ஆலக்குடியில் இருந்து திருச்சி பொன்மலை வரையில் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சார வயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரையிலான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதேபோல் திருவாரூர் வழித்தடத்தில் சாலியமங்கலத்தில் இருந்து காரைக்கால் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. தற்போது தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியில் இருந்து சாலியமங்கலம் வரையில் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.

இந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக தஞ்சை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருச்சி–காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் இருந்து சாலியமங்கலம் வரை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு மின்சார ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வரும். தஞ்சை–திருச்சி இடையே தற்போது டீசல் ரெயில் என்ஜின்தான் இயக்கப்பட்டு வருகின்றன.

மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் தஞ்சை–திருச்சி இடையே ஆய்வு செய்து அதன் பின்னர் முதல் கட்டமாக பயணிகள் ரெயில் இயக்கப்படும். மின்மயமாக்கல் திட்டம் நிறைவேறினால் ரெயில்களின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறையும். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மாசுபடாது. ரெயில்களில் டீசல் பயன்பாடு பெருமளவு குறையும். இதனால் ரெயில்வே துறைக்கு செலவும் குறையும். மின்சார என்ஜின்களுக்கு அதிக இழுவை திறன் இருக்கும் என்பதால் ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை சேர்க்கவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் உண்டு ’’என்றனர்.

Next Story