காதலர் தின கொண்டாட்டம்: பூங்காக்களில் குவிந்த காதல் ஜோடிகள்


காதலர் தின கொண்டாட்டம்: பூங்காக்களில் குவிந்த காதல் ஜோடிகள்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 9:27 PM GMT)

காதலர் தின கொண்டாட்டத்தையொட்டி சேலம், ஏற்காடு, மேட்டூர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.

சேலம்,

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதலிகளுக்கு நவநாகரிக உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பரிசு பொருட்களாக கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் அங்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காதல் ஜோடிகள் நேற்று சேலம் அண்ணா பூங்காவில் குவிந்தனர். பின்னர் அவர்களில் சில காதல் ஜோடியினர் அங்குள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் அமர்ந்து கொண்டு நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சில ஜோடியினர் முத்தமிட்டு தங்களது அன்பை பரிமாறிக்கொண்டதை காணமுடிந்தது. சிலர் தங்களது காதலிக்கு ரோஜா மலர்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

இன்னும் சில காதலர்கள் பேசுவதற்கு வசதியாக செல்போன்களை பரிசளித்தும் அன்பை பரிமாறிக்கொண்டனர். அதேசமயம், காதலித்து திருமணம் செய்த ஜோடிகளும் பூங்காக்களுக்கு வந்து மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

ஏற்காடு மலைப்பாதையிலும் ஆங்காங்கே காதலர்கள் தடுப்பு சுவர்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஏற்காட்டில் படகுதுறை, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ரோஜா கார்டன், சேர்வராயன் மலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடியினர் உலா வந்து காதலர் தினத்தை கொண்டாடியதை காணமுடிந்தது. ஏரியில் காதலர்கள் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான காதல் ஜோடியினர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பிறகு அவர்கள் பூங்காவிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். சில காதல் ஜோடிகள் சேலம் மாநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

காதலர் தினத்தையொட்டி மேட்டூர் பூங்காவுக்கு காதலர்கள் ஜோடி, ஜோடியாக நேற்று காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான காதல் ஜோடிகள் புதர்மறைவில் அமர்ந்து இருந்ததை காணமுடிந்தது. மேலும் பூங்காக்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பூங்காக்களில் அத்துமீறிய காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story