அத்திக்குன்னா அருகே, சிறுத்தைப்புலி தாக்கி 2 ஆடுகள் சாவு


அத்திக்குன்னா அருகே, சிறுத்தைப்புலி தாக்கி 2 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 15 Feb 2019 11:00 PM GMT (Updated: 15 Feb 2019 5:31 PM GMT)

அத்திக்குன்னா அருகே சிறுத்தைப்புலி தாக்கி 2 ஆடுகள் இறந்தது. அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அத்திக்குன்னா அருகே அத்திமாநகர் பகுதியில் சிறுத்தைப்புலி தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை தாக்கி கொன்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் தனது வீட்டில் கொட்டகை அமைத்து சில ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிறுத்தைப்புலி கொட்டகைக்குள் நுழைந்தது. பின்னர் 2 ஆடுகளை தாக்கி கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் (பொறுப்பு) கணேசன், வன காப்பாளர் லூயீஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கால்நடை டாக்டர் பாலாஜி வரவழைக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுத்தைப்புலி தாக்கி ஆடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ராமன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் இழப்பீடு தொகை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே சிறுத்தைப்புலி வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் கரடிகள் நடமாட்டமும் உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர அப்பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள்.

Next Story