கல்வி நம்மை முழு மனிதனாக உருவாக்குகிறது ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோட் கோலி பேச்சு


கல்வி நம்மை முழு மனிதனாக உருவாக்குகிறது ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோட் கோலி பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2019 11:13 PM GMT (Updated: 15 Feb 2019 11:13 PM GMT)

கல்வி நம்மை முழு மனிதனாக உருவாக்குகிறது என்று ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோட் கோலி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழகத்தின் 26–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவகர்லால் நேரு கலையரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

விழாவில் சிக்கிம் மாநில ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோட் கோலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒரு நிறுவனம் நிலையாக இருக்க வேண்டும் என்றால் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் பெற்ற பட்டத்தை பார்த்து பெருமை அடையக்கூடாது. பட்டபடிப்பு மற்றொரு பயணத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. கடினமான உழைப்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு ஆகியவை உங்களை உயர்த்தும்.

நீங்கள் உங்கள் வாழ்வில் வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித நாகரீகத்தின் போக்கை பெரிதும் பாதித்துள்ளது. எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முக்கியம் கொடுத்து உழைக்க வேண்டும். இன்றைய உலகில் வாழும் மக்கள் காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டியது அவசியம். இளைஞர்கள் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளை புரிந்து நன்றாக கல்வி பயிலும்போது அது நம்மை முழு மனிதனாக உருவாக்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், பல்கலைக்கழக இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், ராஜீவ் ஜெயின், பதிவாளர் சசிகாந்த தாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சித்ரா, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் 312 மாணவர்களுக்கு ஆய்வறிஞருக்கான முனைவர் பட்டங்களும், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் முதல் இடத்தை பிடித்த 204 மாணவர்களுக்கு தங்க பதக்கங்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 43 மாணவர்களுக்கு இளமுனைவர் பட்டங்களும், 3,667 மாணவர்களுக்கு முதுநிலை பட்டங்களும், 10,874 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும், தொலைத்தூர கல்வியில் பயின்று முடித்த 326 மாணவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ சான்றிதழ்களும், 64 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Next Story