வாய்மேடு அருகே, வளவனாற்றை சொந்த செலவில் தூர்வாரும் மீனவர்கள்


வாய்மேடு அருகே, வளவனாற்றை சொந்த செலவில் தூர்வாரும் மீனவர்கள்
x
தினத்தந்தி 15 Feb 2019 9:45 PM GMT (Updated: 16 Feb 2019 12:03 AM GMT)

வாய்மேடு அருகே வளவனாற்றை மீனவர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

வாய்மேடு, 

நாகை-திருவாரூர் மாவட்ட எல்லையான துளசியாப்பட்டினம் அருகே முக்கிய வடிகாலான வளவனாறு அமைந்துள்ளது. இந்த வளவனாறு கடலில் இணையும் கழிமுகப்பகுதி வழியே மீனவர்கள் படகுகளை இயக்கி சென்று கடலில் மீன்பிடிப்பது வழக்கம். வளவனாற்று கழிமுகத்தின் குறுக்கே வாய்மேடு-கற்பகநாதர்குளம் இடையே அமைக்கப்பட்டுள்ள இயக்கு அணை (சட்ரஸ்) கீழ் பகுதி மீன்பிடி படகுகளை நிறுத்தி கொள்ள ஏதுவாக இருந்து வந்தது.

வாய்மேடு, கரையங்காடு, வாடியக்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, அண்ணாப்பேட்டை, சிந்தாமணிக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 105 பைபர் படகுகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் போது வளவனாற்றின் இயக்கு அணையில் கடலில் இருந்து அடித்து வரப்பட்ட சேறு படிந்துள்ளன. இதனால் படகுகள் இயக்கப்பட்டு வந்த வழித்தடம் தூர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக வளவானற்றில் பொக்லின் எந்திரம் மூலம் சேற்றை தூர்வாரும் பணியை மீனவர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story