மார்த்தாண்டம் அருகே கேரளாவுக்கு வேனில் கடத்திய 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


மார்த்தாண்டம் அருகே கேரளாவுக்கு வேனில் கடத்திய 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 2:57 PM GMT)

மார்த்தாண்டம் அருகே கேரளாவுக்கு வேனில் கடத்திய 2 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குழித்துறை,

ரே‌ஷன்கடையில் வழங்கப்படும் அரிசி, மண் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் மலிவு விலைக்கு வாங்கி அதை குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

 இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்லிங்கம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் சென்னித்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேனை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினார்கள். போலீசார் நிற்பதை கண்ட டிரைவர் உள்பட 4 பேர் உடனே வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.  

இதனால், சந்தேகமடைந்த போலீசார் வேனை சோதனை செய்தனர். அப்போது, அதில் 2 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வேனுடன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 4 பேரை தேடிவருகிறார்கள்.

Next Story