மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு போலீசில் பரபரப்பு புகார்


மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு போலீசில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:30 AM IST (Updated: 19 Feb 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது உணவில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து கர்ப்பிணியாக்கியதுடன், தன்னை மிரட்டி துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் இளம்பெண் புகார் செய்து உள்ளார்.

அடையாறு,

சென்னை அடையாறை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவர், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

என்ஜினீயரான நான், பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கு 2014-ம் ஆண்டு மூளை நரம்பு மற்றும் தசை சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி 2017-ம் ஆண்டு ஊட்டிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றேன்.

அங்கு மலையேற்ற பயிற்சிக்கு வந்த உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்த சஞ்ஜோய் பட்டாச்சார்யா (51) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

மலையேற்றத்தின்போது எடுத்த புகைப்படங்களை அனுப்புவதாக கூறி எனது ‘வாட்ஸ் அப்’ எண்ணை பெற்ற சஞ்ஜோய், அடிக்கடி தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

பின்னர் ரிஷிகேசியில் மலையேற்ற பயிற்சிக்கு வரும்படி என்னை அழைத்தார். அதன்படி அங்கு சென்ற எனக்கு அவர், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் நான் மயங்கிய போது சஞ்ஜோய் என்னை கற்பழித்து விட்டார்.

மயக்கம் தெளிந்து எழுந்த நான், இதுபற்றி கேட்டபோது, தனக்கும், தனது மனைவிக்கும் பிரச்சினை இருப்பதாகவும், விரைவில் அவரிடம் விவாகரத்து பெற்று என்னை திருமணம் செய்வதாகவும் கூறியதால் அதை நம்பி அமைதியாக இருந்து விட்டேன்.

இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். தற்போது சஞ்ஜோய், அவருடைய மனைவி மாதவி மற்றும் ஒருவர் என 3 பேரும் சேர்ந்து என்னை மிரட்டியும், துன்புறுத்தியும் வருகின்றனர்.

இதற்கிடையில் எனக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. என்னை, கற்பழித்து கர்ப்பமாக்கியது மட்டுமின்றி மிரட்டி துன்புறுத்தும் சஞ்ஜோய், அவருடைய மனைவி உள்பட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் சாஸ்திரி நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story