திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 8:12 PM GMT)

திருச்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி முசிறி பழைய சுண்ணாம்புக்காரத்தெருவை சேர்ந்தவர் சின்னையா (வயது 54). விவசாயி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (19). பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த இவர், நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராகி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார்.

இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். ஆனால் முசிறியில் இருந்து அடிக்கடி வந்துவிட்டு செல்ல முடியாது என்பதால் திருச்சி பீமநகர் கணபதிபுரத்தில் வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சரிவர படிக்க முடியாமல் அவர் அவதி அடைந்து வந்தார்.

பெற்றோர் அதிக செலவு செய்து தன்னை படிக்க வைத்து வரும் சூழ்நிலையில் தான் படிக்க முடியாததை எண்ணி பிரியதர்ஷினி மனமுடைந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் பகல் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிதுநேரத்தில் வீட்டுக்கு வந்த பெற்றோர் அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து செசன்சுகோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story