புதுவை தொகுதியில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு சாமிநாதன் எம்.எல்.ஏ. சொல்கிறார்


புதுவை தொகுதியில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு சாமிநாதன் எம்.எல்.ஏ. சொல்கிறார்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:30 PM GMT (Updated: 18 Feb 2019 11:26 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை பா.ஜ.க.விற்கு ஒதுக்க வேண்டும் என்று எனது தலைமையிலான உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லி சென்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பொதுச் செயலாளர் ராம்லால், புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் கோயல் ஆகியோரை சந்தித்து தெரிவிக்க உள்ளோம்.

2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜ.க. 1 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை பெற்று, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே வரும் தேர்தலில் அமையவுள்ள மெகா கூட்டணியில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதுவையில் பா.ஜ.க.வின் வாக்கு 2.8 சதவீதத்தில் இருந்து தற்போது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி முதல்-அமைச்சரின் போராட்டமே நாடகம்தான். இந்த போராட்டத்தில் கட்சிக்காரர்களே பங்கேற்கவில்லை. மக்களிடம் செல்வாக்கை இழந்துள்ளதால் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தலைவர்களை அழைத்து ஆதரவு தர கூறுகின்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது துணை தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story