திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜர் ‘சேலம் சிறையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு’


திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜர் ‘சேலம் சிறையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு’
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 6:59 PM GMT)

திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜராகினர். அப்போது சேலம் சிறையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என ஒரு மாவோயிஸ்டு குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல், 

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி மலைப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டனர். அதை அறிந்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். மேலும் 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பி விட்டனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நீலமேகம், ரஞ்சித், பகத்சிங், ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, கண்ணன், காளிதாஸ் ஆகிய 7 மாவோயிஸ்டுகளை வெவ்வேறு பகுதிகளில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் நீலமேகம், ரஞ்சித் ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று விட்டனர்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு, நேற்று திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் சிறையில் இருக்கும் பகத்சிங், புழல் சிறையில் இருக்கும் ரீனாஜாய்ஸ்மேரி, வேலூர் சிறையில் இருக்கும் செண்பகவல்லி ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அதேபோல் நீலமேகம், ரஞ்சித் ஆகியோரும் ஆஜராகினர். கோவை சிறையில் இருக்கும் கண்ணன், கேரள சிறையில் இருக்கும் காளிதாஸ் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மாவோயிஸ்டு பகத்சிங் சேலம் சிறை அதிகாரிகள் தனக்கு மருத்துவ சிகிச்சைக்கு உரிய ஏற்பாடு செய்யவில்லை. சிறை மருத்துவர்கள் வரும் போது மட்டுமே சிகிச்சை அளித்தனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதனால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்த முறை பகத்சிங், ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் வக்கீலுடன் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். 

Next Story