விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் நஷ்டஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு


விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் நஷ்டஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:15 PM GMT (Updated: 19 Feb 2019 7:24 PM GMT)

விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் எஸ்.வி.நகரில் வசித்து வந்தவர் சின்னையன்(வயது47). சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வெள்ளையம்மாளை அழைத்து கொண்டு சென்றார். பட்டுக்கோட்டை-ஆவணம் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணவன்-மனைவி 2 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னையன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திண்டுக்கல் சிதம்பரனார் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல்(36). தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையத்தின் வடக்குவாசல் பகுதியில் நடைபாதை அருகே அமர்ந்து காலணியை தைத்து கொண்டு இருந்தார். அப்போது அரசு பஸ் ஒன்று இரும்பு தடுப்பு மீது மோதியதுடன் சக்திவேல் மீதும் மோதியது. இதில் காயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் பாரதியார்நகரில் வசித்து வந்தவர் சிவபிரகாசம்(58). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி வீட்டில் இருந்து டீக்கடைக்கு செல்வதற்காக ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிவபிரகாசம் படுகாயம் அடைந்தார். அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த 3 விபத்திற்கும் நஷ்டஈடு கேட்டு இறந்தவர்களின் குடும்பத்தினர் தஞ்சை மாவட்ட முதன்மை கோர்ட்டு மற்றும் விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில், சின்னையன் குடும்பத்திற்கு ரூ.11 லட்சத்து 20 ஆயிரத்தை நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் புதுக்கோட்டை கிளை மேலாளருக்காக தஞ்சை மண்டல மேலாளர் வழங்க வேண்டும் எனவும், சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 500 வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குனருக்கும், சிவபிரகாசம் குடும்பத்திற்கு ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்து 816 வழங்க மோட்டார் சைக்கிளை ஓட்டிய ரூபன் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தஞ்சையை அடுத்த ஏழுப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் ரவி(வயது40). விவசாயி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏழுப்பட்டி-குருங்குளம் மெயின்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அவர் படுகாயம் அடைந்தார். தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வலது கால் வெட்டி எடுக்கப்பட்டது. பின்னர் குணம் அடைந்தார். விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு ரவி, தஞ்சை விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரவிக்கு ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 249 வழங்க தஞ்சை தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Next Story