திருச்சியில் பயங்கரம் செல்போன் தகராறில் 2 வாலிபர்கள் குத்திக்கொலை


திருச்சியில் பயங்கரம் செல்போன் தகராறில் 2 வாலிபர்கள் குத்திக்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2019 11:15 PM GMT (Updated: 19 Feb 2019 8:50 PM GMT)

திருச்சியில் செல்போன் தகராறில் 2 வாலிபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது34). இ.பி. ரோடு அருகே உள்ள விறகுபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் (28). பெயிண்டர்களான இருவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது ஆண்டாள் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெகநாதன் அந்த வழியாக வந்தார். அவர் செல்போனில் பிரகாஷ், ராஜ்குமாரை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெகநாதனை சரமாரியாக தாக்கி, அவருடைய செல்போனை பறித்தனர். அப்போது, தான் செல்போனில் படம் எடுக்கவில்லை என்று ஜெகநாதன் கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போனை திரும்ப கொடுத்தனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற ஜெகநாதன், ஆத்திரத்தில் திரும்பி வந்தார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோரை அவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை கண்ட அப்பகுதியினர் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா மற்றும் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்து கிடந்த 2 பேரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோரை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கொலையான 2 பேரின் வீட்டில் இருந்து பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு திரண்டனர். கொலையானவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இந்நிலையில் ஜெகநாதன் கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலையால் திருச்சி தேவதானம் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story