பொய்சர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது


பொய்சர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது
x
தினத்தந்தி 19 Feb 2019 10:06 PM GMT (Updated: 19 Feb 2019 10:06 PM GMT)

பொய்சர் அருகே கணவரை கொலை செய்த பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

வசாய்,

பால்கர் மாவட்டம் பொய்சர், சிவாஜிநகர் பகுதியை சோ்ந்தவர் அனில் குமார்(வயது32). இவரது மனைவி மம்தா. வேலைக்கு சென்ற அனில்குமாரை காணவில்லை என கடந்த 15-ந்தேதி மம்தா போலீசில் புகார் அளித்தார். அடுத்த நாள் அனில்குமாா் கொலை செய்யப்பட்ட நிலையில் பொய்சர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து விசாரிக்க போலீசார் மம்தாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டில் ரத்த கறைகள் படிந்து இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை மம்தா ஒப்புக்கொண்டார்.

அனில் குமாரின் உறவினர் சோனு(22). இவர் அனில் குமாரின் வீட்டில் தங்கி இருந்து உள்ளார். இதில், மம்தாவிற்கும், சோனுவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அனில் குமார் 2 பேரையும் கண்டித்து உள்ளார். இதுதொடர்பாக கடந்த 13-ந்தேதி சோனுவுக்கும், அனில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சோனு வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அனில் குமாரை அடித்து கொலை செய்தார். பின்னர் அவர் மம்தா உதவியுடன் அனில்குமாரின் உடலை அருகில் உள்ள காட்டு பகுதியில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மம்தா மற்றும் அந்தேரி பகுதியில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சோனுவை கைது செய்தனர்.

Next Story