‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்


‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:30 PM GMT (Updated: 19 Feb 2019 10:07 PM GMT)

‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி, குன்னத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பாக கீழே அழைத்துவந்தார்.

குன்னத்தூர்,

குன்னத்தூர் அருகே உள்ள காவுதம்பாளையம் கிராமம் கந்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 32). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 4 நாட்களில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தாய்–தந்தையுடன் வசித்து வருகிறார்.

மதுகுடிக்கும் பழக்கம் கொண்ட சுரேஷ் எந்தவேலைக்கும் செல்வது இல்லை.

இந்த நிலையில் நேற்று மாலையில் குன்னத்தூர் தனியார் மருத்துவனைக்கு அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரம் அருகே சுரேஷ் சென்றார். பின்னர் திடீரென்று செல்போன் கோபுரத்தில் ஏறினார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள், சுரேசிடம், எதற்காக கோபுரத்தின் மீது ஏறுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு சுரேஷ் ‘‘ எங்கள் ஊருக்கு ரோடு சரியில்லை, பஸ்கள் வருவது இல்லை, இதனால் கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’’ என்று கூறிக்கொண்டு வேகமாக செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று விட்டார். உடனே அங்கிருந்தவர்கள் குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து போலீசாரும், அவினாசி தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று அவரிடம் கீழ் இருந்து மைக் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சுரேஷ் ‘‘ முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனைவரும் இங்கு வரவேண்டும். அப்போதுதான் நான் கீழே இறங்கி வருவேன். இல்லை என்றால் குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டல்விடுத்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர் ஒருவர் நைசாக பேசி கோபுரத்தின் மீது ஏறி, அவரை கீழே அழைத்து வந்தார். பின்னர் குன்னத்தூர் போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story