கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்


கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 20 Feb 2019 2:50 PM GMT)

மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் வலியகாட்டுவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது 52), தச்சுத்தொழிலாளி. இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

முருகன் வேலைக்கு செல்வதற்கு முன் வீட்டுக்கு எதிரே உள்ள வேறொருவர் வீட்டில் குடிநீரை பிடித்து வருவது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குடிநீரை குடத்தில் பிடித்துக்கொண்டு முருகன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று      வேகமாக வந் தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் முருகன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட  முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story