பேரையூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ வீடியோ எடுத்த 2 பேர் கைது


பேரையூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ வீடியோ எடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2019 10:30 PM GMT (Updated: 20 Feb 2019 10:09 PM GMT)

சாப்டூர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ ஆப் மூலம் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 வாலிபர்களை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்,

ஸ்மார்ட் போன்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கட்டி இழுத்து கொண்டிருக்கும் சமூக வலைத்தள செயலியாக இருக்கிறது, டிக்–டாக். வீடியோவாக பாடல்களை ஒலிபரப்பி அதற்கேற்றாற்போல் நடனமாடவும், ஒப்பனை செய்வதற்கும் இந்த செயலி வழி திறக்கிறது. இதன்மூலம் தற்போது லட்சக்கணக்கான இளைஞர், இளம்பெண்கள் தங்களது ஒப்பனைகளை இந்த செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் போலீஸ் கார் முன்பு டிக்–டாக் வீடியோ எடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் நிலையம் முன்பும் டிக்–டாக் வீடியோ அரங்கேறி இருக்கிறது. அவ்வாறு டிக்–டாக் வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வண்டபுலி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் ஒரு வழக்கில் விசாரணைக்காக சாப்டூர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த அம்மாசிமுத்து (வயது 25), சதீஸ்குமார் (20) ஆகியோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

பின்னர் உடன் வந்த அம்மாசிமுத்து, சதீஸ்குமார் ஆகியோர் வீட்டிற்கு செல்வதற்காக போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வருவதை வீடியோவாக ஒருவர் மாற்றி மற்றொருவராக டிக்–டாக் ஆப் மூலம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ ஒப்பனைக்கு ஏற்றவாறு பாடலையும் செயலியில் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு எடுத்த வீடியோவை டிக்–டாக் செயலியில் அம்மாசிமுத்துவும், சதீஸ்குமாரும் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வைரலாக அந்த செயலியில் பரவியது. இதனை பலரும் லைக் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த வீடியோ பதிவேற்றம் குறித்து சாப்டூர் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, காவல் துறை குறித்து டிக்–டாக் செயலி மூலம் அவதூறு பரப்பியதாக அம்மாசிமுத்து, சதீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story