எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் கலெக்டர் தகவல்


எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 7:41 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு பொது தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 92 ஆயிரத்து 979 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 29 மையங்களில் 3,878 மாணவர்களும், 3,724 மாணவிகளும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களில் 5,519 மாணவர்களும், 5,839 மாணவிகளும், எழுதுகிறார்கள். தஞ்சை கல்வி மாவட்டத்தில் 40 மையங்களில் 4,919 மாணவர்களும், 4,830 மாணவிகளும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 20 மையங்களில் 2,352 மாணவர்களும், 2,416 மாணவிகளும் என மொத்தம் 16,668 மாணவர்களும், 16,809 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 477 பேர் எழுதுகிறார்கள்.

பிளஸ்-1 பொதுத்தேர்வை பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 3,180 மாணவர்களும், 3,690 மாணவிகளும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களில் 4,003 மாணவர்களும், 5,199 மாணவிகளும், தஞ்சை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 3,567 மாணவர்களும், 4,474 மாணவிகளும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 மையங்களில் 1,660 மாணவர்களும், 2,173 மாணவிகளும் என மொத்தம் 12,410 மாணவர்களும், 15,536 மாணவிகளும் என 27,946 பேர் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வை பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 மையங்களில் 3,401 மாணவர்களும், 3,998 மாணவிகளும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் 4,284 மாணவர்களும், 5,420 மாணவிகளும், தஞ்சை கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 3,734 மாணவர்களும், 4,846 மாணவிகளும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 மையங்களில் 1,711 மாணவர்களும், 2,162 மாணவிகளும் என மொத்தம் 13,130 மாணவர்களும், 16,426 மாணவிகளும் என 29 ஆயிரத்து 556 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமனம் செயப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் 224 பறக்கும் படை அமைக்கப்படுகிறது.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கைபேசி கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story