டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 25 Feb 2019 10:45 PM GMT (Updated: 25 Feb 2019 8:19 PM GMT)

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மதுரை,

தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தஞ்சை பள்ளியக்கரஹாரம் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிகளின்படி டாஸ்மாக் கடை அமைக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கோவில், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரி போன்றவை இருக்கக்கூடாது.

ஆனால், பள்ளியக்கரஹாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகில் பஸ் நிலையம், மாநகராட்சி பள்ளி, தனியார் பள்ளி, கோவில் ஆகியவை அமைந்துள்ளன. அங்கு டாஸ்மாக் கடையை தொடங்கினால் பொதுமக்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் இடையூறாக அமையும். எனவே டாஸ்மாக் கடை தொடங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் மதுக்கடைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அவை வருமாறு:–

* தமிழகத்தில் கடந்த 2016–ம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன?

* 2016–ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கட்டங்களாக அவை மூடப்பட்டன?

* 2016–ம் ஆண்டுக்கு பின்பு எத்தனை டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன? இனி எத்தனை கடைகள் திறக்கப்பட உள்ளன?

* தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படுவது எப்போது?

* 2016–ம் ஆண்டில் இருந்து தற்போது வரை டாஸ்மாக் கடைகளால் கிடைத்த வருமானம் எவ்வளவு?

மேற்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக டாஸ்மாக் தலைவர் வருகிற 4–ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story