குடும்பத்தகராறு காரணமாக 4 குழந்தைகளின் கண் எதிரே தீக்குளித்து பெண் தற்கொலை - திருப்பூரில் பரிதாப சம்பவம்


குடும்பத்தகராறு காரணமாக 4 குழந்தைகளின் கண் எதிரே தீக்குளித்து பெண் தற்கொலை - திருப்பூரில் பரிதாப சம்பவம்
x
தினத்தந்தி 25 Feb 2019 10:30 PM GMT (Updated: 25 Feb 2019 8:39 PM GMT)

குடும்பத்தகராறு காரணமாக 4 குழந்தைகளின் கண் எதிரே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் குடும்பத்தகராறு காரணமாக 4 குழந்தைகளின் கண் எதிரே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேமா (வயது 27). இவருடைய கணவர் குமார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரேமாவை விட்டு, குமார் தனியாக சென்று விட்டார். இதன் பின்னர் பிரேமா 3 குழந்தைகளுடன் திருப்பூர் வந்து, பி.என். ரோடு பாண்டியன்நகர் சவுடம்மன் கோவில் வீதியில் வசித்து வந்தார்.

திருப்பூரில் கட்டிட வேலை செய்து வந்த பிரேமாவிற்கு நாகர்கோவிலை சேர்ந்த அய்யாசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தியது. இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அய்யாசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல அய்யாசாமி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் பிரேமாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அய்யாசாமி வெளியே சென்றுவிட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரேமா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவருடைய உடலில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனால் வலியால் அலறி துடித்த பிரேமா அங்கும் இங்கும் ஓடினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அவர் உடல் கருகி இறந்தார். 4 குழந்தைகளின் கண்எதிரே இந்த சம்பவம் அவர்களை பதைபதைக்க வைத்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயின் உடலை பார்த்து 4 குழந்தைகளும் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் அய்யாசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் குடும்பத் தகராறில் 4 குழந்தைகள் கண்எதிரே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story