தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: வணிகர்கள் மனித சங்கிலி போராட்டம்


தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: வணிகர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 8:53 PM GMT)

தக்கலையில் மேம்பாலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தக்கலை,

நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் பிரமாண்டமான மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் கோட்டார் முதல் செட்டிகுளம் வரை மற்றும் தக்கலையில் மணலி முதல் கொல்லன்விளை வரை மேம்பாலம் கட்டப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த மேம்பாலம் கட்டுவதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கிடையே மேம்பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் உண்ணாவிரதம், கடைகள் அடைப்பு, பேரணி உள்பட பல போராட்டங்களில் வணிகர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் மேம்பாலம் எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று மாலையில் வணிகர்கள் கடைகளை அடைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வணிகர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு சங்க தலைவர் ரேவன்கில் தலைமை தாங்கினார். பொது செயலாளர் விஜயகோபால், கவுரவ தலைவர் முபாரக், துணை தலைவர் சண்முகம், பொருளாளர் சங்கரமூர்த்தி, செயலாளர் மோசஸ் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மணலி பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை நின்ற வணிகர்கள், மேம்பாலத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story