வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Feb 2019 10:00 PM GMT (Updated: 25 Feb 2019 9:31 PM GMT)

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

சேலம்,

சேலம் சிவதாபுரம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பனங் காட்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 30). இவர் சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூர்ணிமா (வயது 23). திருமணம் முடிந்ததில் இருந்து வரதட்சணை கேட்டு தனது மனைவி பூர்ணிமாவை மாணிக்கம் கொடுமை படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 15.2.2015 அன்று பெற்றோரிடம் சென்று நகை, பணம் வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பூர்ணிமா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வரதட்சணை கொடுமையால், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் வரதட்சணை கொடுமையால் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக மாணிக்கத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காந்திமதி ஆஜராகி வாதாடினார்.


Next Story