முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் கைது


முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 1 March 2019 10:45 PM GMT (Updated: 1 March 2019 3:46 PM GMT)

முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் நரசிம்மராவ் (வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நரசிம்மராவ், தன்னுடன் பணிபுரிந்து வரும் 25 வயது இளம்பெண்ணிடம் நட்பாக பழகினார். அவரும் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மராவும், இளம்பெண்ணும் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பதிவு திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.

சிறிது நாட்களுக்கு பிறகு அந்த இளம்பெண், தனது பதிவு திருமணம் குறித்து பெற்றோரிடம் கூறினார். அதைக்கேட்டு முதலில் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் தங்கள் மகளின் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் நரசிம்மராவ் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மற்றும் அவரது பெற்றோர் இதுபற்றி விசாரித்தனர்.

அதில், நரசிம்மராவுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருப்பதும், ஆனால் அதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து இருப்பதும் தெரிந்தது. இதுபற்றி வட பழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நரசிம்மராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story