மசினகுடி அருகே வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


மசினகுடி அருகே வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 2 March 2019 10:30 PM GMT (Updated: 2 March 2019 8:54 PM GMT)

மசினகுடி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

மசினகுடி,

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கான்கிரீட் வீடுகள் கட்ட வசதி இல்லாத காரணத்தால், மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்ட வீடுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் பொக்காபுரம் பகுதியில் தக்கல் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரங்கன்(வயது 72). கூலி தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக வீட்டில் இருந்த மின்சார பெட்டி வெடித்து வீடு முழுவதும் தீ பரவியது. உடனே ரங்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து 1 மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், மெத்தை, கிரைண்டர் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story