கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.30 கட்டாய வசூல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்


கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.30 கட்டாய வசூல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 7:43 PM GMT)

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.30 கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக கலெக்டர் அண்ணாதுரையிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பூதலூர், கோவில்பத்து, கெங்கைசமுத்திரம், சித்தாயல், வீரப்புடையான்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், 2017-18-ம் ஆண்டிற்கு பயிர்க் காப்பீட்டுக்கு பிரிமீயத் தொகை செலுத்தி பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரசீது பெற்றுள்ளோம். அதே ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கணினி சேவை மைங்களில் பிரிமீயத்தொகை செலுத்தியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,500 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிரிமீயத் தொகை செலுத்தியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,400 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.4,100 எங்கே என கேட்டால் அதிகாரிகள் சரியாக பதில் அளிப்பதில்லை. தஞ்சை மாவட்டத்தில் எல்லா கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் பலர், கலெக்டரிடம் அளித்த மனுவில், பாபநாசம் தோப்புராஜபுரம், கணபதிஅக்ரஹாரம் கண்டங்கரையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.30 கட்டாய வசூலிக்கப்படுகிறது. பணம் கொடுத்தால் தான் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் நெல் ஈரப்பதமாக இருக்கிறது என கூறி கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே பயிர்க் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். சுந்தரபெருமாள் கோவில், வடபாதி பகுதிகளில் அரசலாறு தூர்வாரப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. எனவே அரலாற்றை தூர்வார வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம், வடக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலெக்டரிடம் அளித்த மனுவில், திருமண்டக்குடி மற்றும் கோட்டூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் அரவைக்காக விவசாயிகள் அனுப்பி வைத்த கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.64 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்று மோசடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளை விவசாயிகள் மீட்க முடியால் தவித்து வருகின்றனர். நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளதா? என்ற சந்தேகம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தெளிவுபடுத்த வேண்டும். நகையை மீட்டு தர வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் மனவருத்தத்தில் உள்ளனர். எனவே நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தஞ்சையை அடுத்த குருங்குளம் கிழக்கு இந்திராகாலனியை சேர்ந்த ராஜ்முருகன் மனைவி ரேவதி தனது குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், எனது மாமியார் அன்புமதி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துபாய் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக முகவர் ஒருவர் மூலம் சென்றார். அங்கு தான் கொடுமைப்படுத்துப்படுவதாகவும், தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என் மாமியார் பேசும் வீடியோ பதிவு வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எனவே என் மாமியாரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக தலைவர் சதா.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் 2 வார்டுகள் மட்டுமே தனி வார்டுகளாக உள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மக்கள் அதிகமாக வசிக்கும் வார்டுகளை தனி வார்டாக மாற்றி அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story