கன்னியாகுமரியில் துறைமுக நிறுவனம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


கன்னியாகுமரியில் துறைமுக நிறுவனம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 8:53 PM GMT)

கன்னியாகுமரியில் அமைய உள்ள துறைமுகத்துக்கான நிறுவனத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் மக்களின் நீண்டநாள் கனவு நனவாகும் வகையில் கன்னியாகுமரி துறைமுக திட்டத்துக்கான துறைமுக நிறுவன தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் கன்னியாகுமரி துறைமுக நிறுவனத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ரிமோட் மூலம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

குமரி மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு நனவாகும் வகையில் பிரதமர் மோடி இன்றை தினம் 28 ஆயிரம் கோடி ரூபாயில் நமக்கு துறைமுகத்தை தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துறைமுகத்துக்காக மத்திய மந்திரிகள் அத்தனை பேரும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களுக்கும், மத்திய அரசு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், இந்த திட்டத்துக்கான சிறப்பு அதிகாரிகள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி இந்த துறைமுகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி துறைமுகத்திற்கான முழு ஆய்வு அறிக்கை 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி தயாரிக்கப்பட்டு விட்டது. இன்று உங்கள் முன்னிலையில் துறைமுக நிறுவனம் தற்போது தொடங்கப்பட்டுவிட்டது.

இனி துறைமுகத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். துறைமுகம் வந்தாகும். இதை வேண்டாம் என்று சொன்னால் மீனவர் சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். துறைமுகம் அமையும்போது ஒரு வீடுகூட போகாது. அந்த அளவிற்கு முழு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். மீனவர்கள் பிடித்த மீன்களை ஏற்றுமதி செய்ய உரிமம் பெற்றுக்கொடுப்பது நம்முடைய கடமை.

இனிமேல் கொச்சி, தூத்துக்குடிக்கு கொண்டுபோய் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. ஏற்றுமதி செய்வதையும் நம்முடைய மீனவர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். மீன்பிடிக்க கஷ்டமாக இருக்கும் என்பதால் மீன்பிடித்துறைமுகம் வேண்டும் என கேட்டார்கள். உடனடியாக நான் மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் பேசி வர்த்தக துறைமுகத்துடன் சேர்த்து மீன்பிடி துறைமுகமும் கட்டப்படும் என்ற உறுதியை தந்துள்ளார். மேலும் மீன் பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தபடுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில் மீனவ சகோதரர்கள் சகல உரிமைகளோடும் ஏற்றுமதியாளர்களாகவும், தொழில் நிறுவனர்களாகவும் வந்தாக வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும்கூட இனி வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டு காலத்துக்குள்ளாக 100 இளைஞர்கள் தொழில் தொடங்கும் அளவுக்கு அவர்களுக்கு உரிமம் பெற்றுக் கொடுப்பது, நிதி வசதிக்கு வங்கிகள் மூலம் பெற்றுக்கொடுப்பது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் நாம் உடன் இருப்போம். அடுத்த 5 ஆண்டு காலத்துக்குள்ளாக துறைமுகம் நீங்கலாக இங்கிருக்கக்கூடிய இளைஞர்கள் தொழில் தொடங்கி 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளோம் என்ற நிலையை உருவாக்கி காட்ட வேண்டும். இனி யார் தலைகீழாக நின்றாலும் துறைமுகத் திட்டத்தை நிறுத்த முடியாது. வாருங்கள் அனைவரும் இணைந்து நமது துறைமுகத்துக்கு உதவுவோம். இணையற்ற குமரி மாவட்டத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரவீந்திரன் பேசுகையில், பொருளின் மதிப்பின் அடிப்படையில் 75 சதவீதமும், எடையின் அடிப்படையில் 95 சதவீதம் சரக்குகள் கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்திய துறைமுகங்கள் மூலம் ஆண்டுக்கு 1500 மில்லியன் டன் பொருட்கள் கையாளப்படுகிறது. மத்திய கப்பல் அமைச்சகம் ஏற்படுத்திய சாகர்மாலா திட்டம் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் 3 ஆயிரம் மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஐரோப்பிய நாடுகள், கீழை நாடுகளின் வழித்தடத்தின் மிக அருகில் கன்னியாகுமரி இருப்பதால் பெரிய கப்பல்கள் இங்கு வந்துசெல்ல வாய்ப்பு உண்டு. அப்படி வரும்போது ஏற்றுமதி, இறக்குமதி செலவு குறையும்’ என்றார்.

தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கூறுகையில், ’பல வருடங்களாக இந்த மாவட்டத்திற்கு துறைமுகம் வேண்டும் என கேட்டு, அந்த கனவு நனவாகிறது என்றால் அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தான் காரணம். கன்னியாகுமரி துறைமுகத் திட்டத்திற்காக எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது. இப்போது நம்முடைய கன்டெய்னர்கள் கொழும்பு வழியாக கொண்டுச் செல்லப்படுகிறது. கன்னியாகுமரி துறைமுகம் வந்தால் அந்த சரக்குகள் நமது துறைமுகத்திற்கு வரும். ஆறு ஆண்டுகளுக்குள் துறைமுகப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என கருதுகிறேன். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 40 சதவீதம், எண்ணூர் துறைமுகம் 40 சதவீதம், சென்னை துறைமுகம் 20 சதவீதம் என பங்கெடுத்து கன்னியாகுமரி துறைமுக நிறுவனத்தை அமைத்துள்ளோம். துறைமுகத்திற்கான நிதி திரட்டும் பணியையும் செய்கிறோம். தேசிய அளவில் கடல் வாணிபத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த துறைமுகம் அமையும். இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் பொருட்களை அனுப்ப முடியும். கன்னியாகுமரி, ராதாபுரம் தாலுகாக்களில் கப்பல் சார்ந்த தொழில் வளரும். தொழில் முனைவோருக்கு புதிய உத்வோகத்தை ஏற்படுத்தும். படித்த மற்றும் திறன் உடைய இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக பணிகள் கிடைக்கும். சுற்றுலாத் துறை மேம்படும்’ என்றார்.

இதில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி மன்சுக் எல்.மண்டாவியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் வாழ்த்தி பேசினர். விழா மேடையின் இருபுறமும் அகன்ற திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் விழாவில் கப்பல்துறை இணை செயலாளர் ஆர்.கே.அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடி துறைமுக துணைத்தலைவர் வையாபுரி வரவேற்று பேசினார்.

விழா முடிந்ததும் அதேமேடையில் துறைமுகம் அமைவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இஸ்மாயில், குமாரதாஸ், காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கதிரேசன், ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், ம.தி.மு.க. வக்கீல் செல்வராஜ் மற்றும் ஐவர் தேவவரம், ஜெபமாலை, நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீராம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

நெல்லையில் இருந்து தாம்பரம் வரை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் நேற்று முதல் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் சென்று அடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் சின்கா தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு அந்தியோதயா ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள், நாகர்கோவில் ரெயில் நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story