மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.3¼ கோடி மோசடி ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது


மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.3¼ கோடி மோசடி ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2019 10:15 PM GMT (Updated: 9 March 2019 6:37 PM GMT)

திருவாரூரில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.3¼ கோடி மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திருவாரூரில் உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு கணினி மூலமாக நடைபெற்ற பண பரிமாற்றத்தில் மோசடி நடத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் மாரீஸ்வரன், திருவாரூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், வங்கியின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அருள்முருகன் என்பவர் கணினி மூலமாக தங்களது உறவினர்கள் வங்கி கணக்கில் ரூ.3 கோடியே 34 லட்சம் வரவு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக வங்கி ஊழியர்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் சசிகுமார், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அருள்முருகன், பாலசுப்பிரமணியன் மற்றும் 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி குமார் உத்தரவிட்டார். மேலும் இதில் தொடர்புடைய வங்கி ஊழியர்கள் உள்பட 13 பேரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story