தேவகோட்டை அருகே வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற கும்பல் காரணம் என்ன? தீவிர விசாரணை


தேவகோட்டை அருகே வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற கும்பல் காரணம் என்ன? தீவிர விசாரணை
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 10:00 PM GMT)

தேவகோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணன்கோட்டை ஈலொழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி வசந்தா (வயது 40). இவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

பழனிக்குமார் மட்டும் பக்கத்தில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு தூங்க சென்று விட்டார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் வசந்தா தூங்கிக்கொண்டிருந்த வீட்டுக்குள் மர்ம மனிதர்கள் புகுந்தனர். அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த வசந்தாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி, கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். அப்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு பழனிகுமார் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்த போது வசந்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர், மகன், மகளிடம் விசாரணை நடத்தினர். சம்பவம் இடத்தை தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பார்வையிட்டு, மேல் விசாரணை நடத்தினார்.

போலீஸ் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் வரை மோப்பநாய் ஓடிச் சென்றது. ஆனால், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. வசந்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வசந்தாவை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story