நாகர்கோவிலுக்கு ராகுல்காந்தி 13-ந் தேதி வருகை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு


நாகர்கோவிலுக்கு ராகுல்காந்தி 13-ந் தேதி வருகை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 10 March 2019 11:00 PM GMT (Updated: 10 March 2019 9:02 PM GMT)

நாகர்கோவிலுக்கு வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை எங்கு நடத்துவது? என்பதில் குழப்பமாக இருந்தது. இதற்காக நாகர்கோவிலில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதாவது ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம், பொன்ஜெஸ்லி கல்லூரி மைதானம் மற்றும் கன்கார்டியா பள்ளி மைதானம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் விவேகானந்தா கல்லூரி மைதானமும் பரிசீலனையில் இருந்தது.

இந்தநிலையில் குமரி மாவட்டம் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்தனர். ஆனாலும் டெல்லியில் இருந்து பாதுகாப்பு குழுவினர் வந்து பார்வையிட்ட பிறகு தான் பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று நாகர்கோவில் வந்தனர். தொடர்ந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். விழா மேடை அமைக்கப்பட உள்ள இடம், பொதுமக்கள் வரும் வழி, ராகுல்காந்தி ஹெலிகாப்டர் இறங்கும் இடம் உள்ளிட்டவற்றை அந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் ஆகியோரும் உடன் சென்று சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். மேலும் செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ., மயூரா ஜெயக்குமார், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ், அசோகன் சாலமன் மற்றும் நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பது பற்றி பேசினார்கள். அதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள், விழா மேடையை எந்த வடிவில் அமைப்பது? ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி மேடைக்கு வரும் வழியை அலங்கரிப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.

Next Story