பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்


பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.2 கோடி பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 5:31 PM GMT)

திருப்போரூர் அருகே பர்னிச்சர் தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

ஆலந்தூர்,

சென்னை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, பாலாஜி ஆகியோர் இணைந்து காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் - வண்டலூர் சாலை மேலக்கோட்டையூர் அருகே போரூர் பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்கள்.

இங்கு வீட்டுக்கு தேவையான கட்டில், பீரோ, மெத்தை மற்றும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் டேபிள், சேர் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. அந்த சமயத்தில் காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சிறுசேரி, மறைமலைநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

இதனையடுத்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து கூடுதலாக 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் எந்திரம் முற்றிலுமாக எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story