பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம்: கலெக்டர் அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை


பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம்: கலெக்டர் அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 9:04 PM GMT)

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் பிரச்சினையில் நடவடிக்கை கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். வகுப்புகளை புறக்கணித்து தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது பல இளம்பெண்களை முகநூல் வாயிலாக பழகி, பின்னர் அவர்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து ஏராளமான வீடியோ படங்களை எடுத்து ஒரு கொடூர கும்பல் காமவெறியாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்தாலும், இதை கண்டிக்கும் வகையில் அரசியல் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11.15 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிடும் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரபிரசாத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் ரேணுகா, செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுபோல, திருச்சி-புதுக்கோட்டை சாலை குண்டூரில் உள்ள எம்.ஐ.இ.டி. தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை கண்டித்து நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே வந்தனர். பின்னர், அவர்கள் கல்லூரிக்கு செல்லும் பாதையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவ-மாணவிகள் பாலியல் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story