நாமக்கல் மாவட்டத்தில் போலி பத்திரங்கள் புழக்கம் அதிகரிப்பு? லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


நாமக்கல் மாவட்டத்தில் போலி பத்திரங்கள் புழக்கம் அதிகரிப்பு? லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 9:46 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் போலி பத்திரங்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு மோசடிகளும் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது. எனவே மோசடிகளை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஓராண்டில் நில பத்திரம் காணவில்லை, வீட்டு பத்திரம் காணவில்லை என 94 புகார்கள் பெறப்பட்டு, சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது ஒருவர் தனது பத்திரத்தை வேரு ஒருவரிடம் அடமானம் வைத்து விட்டு, பின்னர் போலீசில் புகார் செய்து, தனது பத்திரம் காணவில்லை என அறிக்கை பெற்று விடுவதும், பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுப்பத்திரத்தை வாங்கி விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் அடமானத்துக்காக பத்திரத்தை பெற்ற நபர், தன்னிடம் பத்திரம் இருப்பதாக நம்பிக்கையுடன் இருக்கும் வேளையில், அவர் மாற்றுப்பத்திரத்தை வேரு ஒருவரிடம் வழங்கி தனது நிலத்தை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுபோன்ற மோசடிகள் நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் நடைபெற்று இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக இதுபோன்ற மாற்று பத்திரங்கள் நாமக்கல், பரமத்திவேலூர், குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாற்றுப்பத்திரங்கள் மூலம் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- மாற்றுப்பத்திரம் வாங்கும்போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பத்திரம் காலாவதியாகி விடும். அது மட்டும் இன்றி நோட்டரி பப்ளிக் மூலம் எழுத்து பூர்வமாக தனது பத்திரம் காணவில்லை. கிடைக்கும் பட்சத்தில் கோர்ட்டில் ஒப்படைக்க தயாராக உள்ளேன் என்ற உறுதிமொழியை வழங்கினால் மட்டுமே, சார்பதிவாளர் அலுவலகங்களில் மாற்றுப்பத்திரம் வழங்கும் நடைமுறை உள்ளது.

எனவே ஒரு பத்திரத்தை அடமானம் வைத்து விட்டு, மாற்றுப்பத்திரம் வேண்டும் என விண்ணப்பித்து பெறுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நபர் சிறைக்கு செல்வது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் போலி பத்திரங்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாக வெளியாகி உள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story