தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா? குமரியில் 24 மணி நேரமும் பறக்கும் படை மூலம் கண்காணிப்பு கலெக்டர் தகவல்


தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா? குமரியில் 24 மணி நேரமும் பறக்கும் படை மூலம் கண்காணிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 2:44 PM GMT)

குமரியில் தேர்தல் விதிமுறை மீறப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கும், 117 மண்டல குழுக்களை சார்ந்த அலுவலர்களுக்கும், அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடத்தை மாதிரி குறியீடு, வாக்குப்பதிவு எந்திரம் குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? மீறப்படுகிறதா? என்பது குறித்து 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 18005998010, 04652 –225564 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும் தேர்தல் தகவல் தொடர்பு மைய தொலைபேசி எண் 1950–ஐ தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.     

மேலும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் உதவி செலவின கண்காணிப்பாளர், கணக்கியல் குழு, வீடியோ கண்காணிப்பு குழு, செலவின கண்காணிப்பு குழுவினை சார்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் செலவினம் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

Next Story