பெரியகுளம் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2½ லட்சம் திருட்டு


பெரியகுளம் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 7:14 PM GMT)

பெரியகுளம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சம் திருட்டு போனது.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கூட்டுறவு வங்கி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 57). முன்னாள் ராணுவ வீரர். அவருடைய மகள் திருமணம் ஓசூரில் நடந்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அவர் ஓசூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நாகராஜனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் 20 பவுன் நகை, 4 வெள்ளி நாணயங்களை திருடி சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தென்கரை போலீஸ்நிலையத்துக்கு நாகராஜன் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை, கைரேகை நிபுணர் சையது ரகமத்துல்லா பதிவு செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story