பொன்னேரி ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை


பொன்னேரி ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2019 10:45 PM GMT (Updated: 15 March 2019 5:47 PM GMT)

பொன்னேரி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே பொதுமேலாளரிடம் பயணிகள் வலியுறுத்தினர்.

பொன்னேரி,

பொன்னேரி ரெயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா நேற்று முன்தினம் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை ரெயில்வே அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பொறியாளர் கட்டிடத்தையும், பூங்காவையும் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டார்.

பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரெயில் பயணிகள் சங்கத்தினர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும், பொன்னேரி ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ரெயிலில் பயணம் செய்வதற்கு நடைமேடையில் உரிய உபகரணங்கள் வழங்கி நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.

அப்போது அங்கு வந்திருந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரெயில் நிலையத்தில் பினாங்கினி எக்ஸ்பிரஸ் உள்பட குறிப்பிட்ட 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே குடியிருப்பு பகுதிகளிலும், ரெயில் நிலைய பகுதிகளிலும் முறையான தார்சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என ரெயில்வே அதிகாரி குல்ஷேத்ராவிடம் தெரிவித்தார்.

மேலும் பயணிகள் சார்பில், ரெயில் முன்பதிவு நிலவரம் தெரிந்துகொள்ள கூட பல மணி நேரம் டிக்கெட் முன்பதிவு வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தகவல் அறியும் தொடுதிரை கணினியை கூட ரெயில்வே நிர்வாகம் அகற்றி பல ஆண்டுகள் ஆகிறது. கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் தேவையின்றி வெளியாட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது ரெயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ரா, பயணிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்று கொண்டார்.

பின்னர் அவர் பதில் அளித்து பேசுகையில், கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் குறிப்பிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்படுவது தொடர்பான கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரெயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா தெரிவித்தார்.

Next Story