பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்யக்கோரி - வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்யக்கோரி - வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2019 11:37 PM GMT (Updated: 18 March 2019 11:37 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவ குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்யக்கோரி திருப்பூரில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

பொள்ளாச்சியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் அரசியல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் கைது செய்து தண்டிக்க வலியுறுத்தியும், நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருப்பூரில் உள்ள வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கோர்ட்டு வீதியில் கோர்ட்டின் நுழைவு வாசல் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ராமசாமி, திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ரவி, திருப்பூர் பார் அசோசியேசன் சங்க தலைவர் பழனிசாமி மற்றும் பாலகுமார் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3 சங்கத்தை சேர்ந்த பெண் வக்கீல்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் 3 சங்கங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிக்கு செல்லவில்லை. இதனால் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு, தாலுகா கோர்ட்டுகளில் வழக்கு மற்றும் சாட்சி விசாரணை பணிகள் பாதிக் கப்பட்டன.


Next Story