திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 18 March 2019 11:42 PM GMT (Updated: 18 March 2019 11:42 PM GMT)

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திருப்பூரில் 2 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 29-ந் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசிநாளாகும். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்றுகாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்கினார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், மண்டல அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரம் தொடர்பான அனுமதி பெற இணையதளம், செல்போன் செயலி மூலம் விண்ணப்பிப்பது குறித்து படத்துடன் விளக்கப்பட்டது. சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (நெடுஞ்சாலைத்துறை) மீனாட்சிசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறியதாவது:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடமும், திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவல்லியிடமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தாக்கல் செய்யலாம். இதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் அந்த மையத்தின் 100 மீட்டர் தூரத்துக்குள் 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய 5 பேர் வரலாம். வேட்பாளருடன் 4 பேர் வர அனுமதிக்கப்படும். வேட்பாளர் இல்லாவிட்டால் அவருடைய முதன்மை முகவர் வந்து விண்ணப்பிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிச்சான்றிதழுடன் ரூ.12,500 டெபாசிட் செலுத்த வேண்டும். இந்த தொகையை பணமாகவோ, கருவூலத்தில் எடுக்கப்பட்ட ‘செலான்’ மூலமாக செலுத்தலாம்.

வேட்பு மனு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படும். வேட்பு மனுவில் குற்றவியல் நடவடிக்கை தொடர்பாக படிவம் 26-ஐ முழுவதுமாக நிரப்ப வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசிநாளில் மாலை 3 மணிக்குள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வேட்பு மனு பெறப்படும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். வேட்பாளர்கள் இந்தியாவில் எந்த தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். ஆனால் முன்மொழியும் 10 பேரும் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது அவசியம்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வேட்பாளர் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதன் மூலமாக செலவுகளை செய்ய வேண்டும். ரூ.10 ஆயிரம் வரை நேரடியாக செலவு செய்யலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக்கணக்கு மூலமாகவே செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா கூறும்போது, திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும், 63 இடங்களில் தெருமுனைக்கூட்டம் நடத்தவும் அனுமதிக்கப்படும். 7 நாட்களுக்கு முன்பாக பிரசார அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் வசதியாக இருக்கும். முன்கூட்டியே விண்ணப்பித்தவர்களுக்கு முன்அனுமதி அடிப்படையில் பிரசார அனுமதி வழங்கப்படும். பொதுக்கூட்டம் நடக்கும்போது கட்சிக்கொடிகள் கட்டலாம். விளம்பர பலகைகள், பதாகைகளை வைக்கக்கூடாது.

அதுபோல் மண்டபங்களில் கூட்டம் நடக்கும்போது விளம்பர பலகைகளை உள்ளே வைத்துக்கொள்ளலாம். விதிமுறை மீறினால் பறக்கும் படையினர் விளம்பர பலகைகளை பறிமுதல் செய்வார்கள் என்றார்.


Next Story