செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் டீத்தூள் கடத்தி விற்பனை; 3 பேர் கைது


செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் டீத்தூள் கடத்தி விற்பனை; 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2019 11:15 PM GMT (Updated: 19 March 2019 9:24 PM GMT)

அசாம் மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள டீத்தூளை கடத்தி விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாரியின் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.

செங்குன்றம்,

கோவை ராகவேந்திரன் காலனியை சேர்ந்தவர் ராம்வீர்சிங் (வயது 37). தொழில் அதிபரான இவர், தனக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள டீத்தூளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு வர முடிவு செய்திருந்தார்.

இதற்காக திருவண்ணாமலை குறிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த காண்டீபன் என்பவருக்கு சொந்தமான லாரியில் டீத்தூள் பெட்டிகள் ஏற்றப்பட்டது. அந்த லாரியை திருவண்ணாமலையை சேர்ந்த லாலாபாஷா என்பவர் கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஓட்டி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 4–ந் தேதி புறப்பட்ட லாரி, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது லாரியின் உரிமையாளர் காண்டீபன் டிரைவர் லாலாபாஷாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது, லாரியை பொள்ளாச்சிக்கு கொண்டு செல்லாமல் சென்னை செங்குன்றம் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

தனது முதலாளியின் பேச்சை கேட்டு, டிரைவர் லாரியை செங்குன்றம் கொண்டு வந்தார். பின்னர் லாரியை லாலாபாஷாவிடமிருந்து காண்டீபன் வாங்கி ஓட்டி சென்று விட்டார். இதற்கிடையே பல நாட்களாகியும் டீத்தூள் வராததால் சந்தேகம் அடைந்த தொழில் அதிபர் ராம்வீர்சிங், டிரைவர் லாலாபாஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போது லாலாபாஷா தனது முதலாளி லாரியை ஓட்டி சென்று விட்டதாக தெரிவித்தார். எனவே டீத்தூள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த ராம்வீர்சிங், இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து மாதவரம் துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவின்பேரில் புழல் உதவி கமி‌ஷனர் ரவி மேற்பார்வையில், செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் டீத்தூளை, சென்னை கொடுங்கையூர் டி.வி.கே.லிங்க் சாலையை சேர்ந்த ராஜா (33) என்பவரிடம் ரூ.17 லட்சத்திற்கு விற்று விட்டு காண்டீபன் தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் டீத்தூளை வாங்கிய ராஜா மற்றும் காண்டீபனின் கூட்டாளி விஜய்(41), சகோதரர் பழனி (35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தலைமறைவான காண்டீபன், டீத்தூள் விற்க உதவிய தேவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story