நெய்வேலியில், லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலி


நெய்வேலியில், லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 10:25 PM GMT)

நெய்வேலியில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலியானார்.

நெய்வேலி,

நெய்வேலி அருகே மேல்வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் சிவகங்கை மகள் சிவரஞ்சினி (வயது 23). என்ஜினீயரான இவர், இந்திராநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வடலூர் ஆபத்தாரணபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வசந்தகுமாரி (32). இவரும் இந்திரா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சிவரஞ்சினி வடக்குத்து பஸ் நிறுத்தத்தில் இந்திராநகர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது வடலூரில் இருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு வசந்தகுமாரி புறப்பட்டார். வரும் வழியில் பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்த சிவரஞ்சினியை வசந்தகுமாரி பார்த்தார். உடனே அவர் ஸ்கூட்டரை நிறுத்தி, சிவரஞ்சினியை ஏற்றிக்கொண்டு இந்திராநகர் நோக்கி புறப்பட்டார்.

இந்திரா நகர் ஆர்ச் கேட் அருகே சென்ற போது, ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி 2 பேரும் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிவரஞ்சினி சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த வசந்தகுமாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story