ராஜபாளையம் பகுதியில் நில அதிர்வு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பரபரப்பு


ராஜபாளையம் பகுதியில் நில அதிர்வு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 March 2019 11:45 PM GMT (Updated: 19 March 2019 10:40 PM GMT)

ராஜபாளையம் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சம்மந்தபுரம், தாலுகா அலுவலகத்தை சுற்றி உள்ள பகுதிகள், திருவனந்தபுரம் தெரு, பச்சைமடம் பகுதி, சேத்தூர், முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி, மேட்டுப்பட்டி, சுந்தரராஜபுரம், நக்கனேரி உள்ளிட்ட 20 கிராம பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 2 நொடிகள் நில அதிர்வு உணரப்பட்டது. இதனை அடுத்து வீட்டினுள் இருந்த மக்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நில அதிர்வால் திருவனந்தபுரம் தெருவில் உள்ள வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பில்லை. நக்கனேரி, பட்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் வீட்டினுள் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்களும், அலுவலர்களும் சுமார் 20 நிமிடங்கள் வெளியே நின்றிருந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு கருதி தளவாய்புரம் பகுதியில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கும், நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கும் நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை விடப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வால் பொதுமக்கள் பீதியுடன் காணப்பட்டனர்.

இதுகுறித்து தாசில்தார் ராமச்சந்திரனிடம் கேட்ட போது, “நில நடுக்கம் தொடர்பாக ரிக்டர் அளவு கோலில் ஏதும் பதிவாகவில்லை. ராஜபாளையத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள நில அதிர்வு பதிவிடும் கருவிகளிலும் எந்த பதிவும் இல்லை. ஆனால் எங்கோ ஒரு பகுதியில் தொடர்ந்து வெடி வெடிப்பது போன்ற சத்தம் மட்டும் கேட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விசாரித்து வருகிறோம்“ என்று தெரிவித்தார்.


Next Story