கருணாநிதி பிறந்த தொகுதி என்ற உரிமையில் வாக்கு கேட்க வந்துள்ளேன் திருக்காரவாசலில், மு.க.ஸ்டாலின் பேச்சு


கருணாநிதி பிறந்த தொகுதி என்ற உரிமையில் வாக்கு கேட்க வந்துள்ளேன் திருக்காரவாசலில், மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 3:50 PM GMT)

கருணாநிதி பிறந்த தொகுதி என்ற உரிமையில் வாக்கு கேட்க வந்துள்ளேன் என்று திருக்காரவாசலில், மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்திற்கு நேற்று வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், பெண்கள் உள்பட அனைவரையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–


திருக்காரவாசல் பகுதியில் வாக்கு கேட்க வேண்டிய தேவையில்லை. நிச்சயமாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். உறவு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், நம்ம பிள்ளை எல்லா ஊரிலும் சென்று வாக்கு கேட்கிறது. நம் ஊருக்கு வரவில்லையே என்று நினைக்கக்கூடாது என்பதற்காகவும் வந்துள்ளேன். ஏனென்றால் தலைவர் கருணாநிதியை ஈன்றெடுத்த தொகுதி என்ற உரிமையில் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். தலைவர் கருணாநிதி தற்போது இல்லையென்றாலும், அவர் என்றும் நமது உள்ளத்தில் அழியாமல் இருக்கிறார்.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நடந்த பா.ஜனதா ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதா அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதில் சந்தேகமே தேவையில்லை. நம்முடைய ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய போகிறது. இந்த ஆட்சியை பயன்படுத்தி இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்தில் என்ன செய்ய போகிறோம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.


பா.ஜனதா ஆட்சியில் டெல்லி சென்று விவசாயிகள் போராடும் நிலை இருந்து வந்தது. அங்கு பிச்சை எடுக்கும் போராட்டம், அரை நிர்வாரணம் மட்டுமல்ல, முழு நிர்வாரண போராட்டமே நடத்தப்பட்டது. மரியாதைக்குகூட விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி குறைகளை கேட்கவில்லை. நடிகர்கள் உள்பட பலரை சந்தித்து பேசுபவர்கள், உரிமைக்காக போராடுகின்ற விவசாயிகளை சந்திக்க மறுத்தனர்.

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு திட்டத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதைபற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மீத்தேன் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை, வேளாண்மையை பாதுகாக்க மீத்தேன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறிட தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பையன், மாநில துணை செயலாளர் வரதராஜன், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் தியாகராஜன், பொருளாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story