தேர்தல் அறிக்கையில் திருத்தம்: அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு


தேர்தல் அறிக்கையில் திருத்தம்: அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 6:51 PM GMT)

கூட்டணி கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து திருத்தம் செய்யப்படும் என திருவாரூரில், மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

தேர்தல் களத்தில் முதல் பிரசார கூட்டத்தை திருவாரூரில் தொடங்கி உள்ளேன். அதாவது உங்கள் அன்பு, வாழ்த்தை பெற்று கருணாநிதி பிறந்த ஊரில் இருந்து தொடங்கி உள்ளேன். கருணாநிதி பிறந்த ஊரில் உங்கள் அன்பை, வாழ்த்தை பெறுவதை தலைவர் கருணாநிதியிடம் நான் வாழ்த்து பெற்றதாக நினைக்கிறேன். இந்தியாவின் தலைநகரம் டெல்லி. தமிழகத்தின் தலைநகரம் சென்னை. தி.மு.க.வின் தலைநகரம் திருவாரூர்.

இந்த திருவாரூரில் தான் தமிழ்மொழியை காத்திட வேண்டும் என்பதற்காக மாணவர்களை ஒன்று திரட்டி, தமிழ் கொடி ஏந்தி கருணாநிதி போராடினார். தமிழுக்காக வாழ்ந்த கருணாநிதி பிறந்த ஊரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி என்றைக்கு முடிகிறது என்றால் ஜூன் 3-ந்தேதி. அன்று தான் கருணாநிதியின் பிறந்தநாள். என்ன ஒற்றுமை.

திருவாரூருக்கு நான் வாக்கு கேட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எல்லாம், நம்ம ஊருக்கு வரவில்லை என்று கூறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் வந்துள்ளேன்.

மத்தியில் நடைபெறும் பாசிச மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடியின் ஆட்சிக்கு விடை காணவும் வாக்கு கேட்க வந்துள்ளேன்.

ஊழலை எதிர்த்து ஆட்சி செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழகத்தில் ஊழல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கும் துறைகளில் மட்டும் ரூ.3,500 கோடி ஊழல் நடந்துள்ளது என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். அதற்கு முகாந்திரம் உள்ளது என்றும், சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு முதல்-அமைச்சர் தடை வாங்கி உள்ளார்.

அதேபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மோடி, ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. மத்திய அரசு மீது ரபேல் ஊழல் உள்ளது.

தி.மு.க.வை விட கேவலமாக அ.தி.மு.க.வை பேசியவர்கள் எல்லாம் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஆனால் தி.முக. கூட்டணி கொள்கை அடிப்படையிலான, லட்சிய பிடிப்போடு அமைந்துள்ள கூட்டணி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பொய்யை கூறி வருகிறார். கடந்த முறை மக்களிடம் பொய்களை கூறி வாக்கு கேட்டார். மக்கள் ஓட்டு போட்டனர். ஆட்சிக்கு வந்ததும், தான் அளித்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

தேர்தல் அறிவிப்பு வரப்போவதற்கு சில நாட்களுக்கு முன்பு மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தார். எதையாவது திறந்து வைத்தாரா? அடிக்கல் தான் நாட்டினார். அவர் இரும்பு பிரதமர் அல்ல. கல்(ஸ்டோன்) பிரதமர்.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியும், அவர்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?. லஞ்சம் மட்டும் அல்ல, எல்லாவற்றையும் தாண்டி ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் 5 கொலைகள் நடந்தது. அதற்கு காரணம் என்ன?. அந்த கொலை தொடர்பாக முதல்-அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூலிப்படையை கேரளாவில் இருந்து வரவழைத்து கொலை நடந்துள்ளது. இதனை குற்றவாளிகளே கூறி உள்ளனர்.

இது தொடர்பாக என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. அதை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். ஆதாரம் இல்லாமல் நாங்கள் எதையும் பேச மாட்டோம். ஆனால் இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் ஆட்சி மத்திய ஆட்சி. அவர்களுடன் கூட்டணி சேர்ந்தது மக்களை ஏமாற்றுவதற்காகத்தான்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டு உள்ளது. அதில் நீட்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போராடின. சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது குடியரசு தலைவருக்கு போகவில்லை. எனவே அ.தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதி யாரை ஏமாற்றுவதற்கு?.

நாடாளுமன்ற தேர்தலுக்கும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கும் தனித்தனியாக தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி சொன்னதை தான் செய்தார். விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றார். செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம் என்றார். வழங்கினார். அவர் சொல்லாததையும் செய்தார்.

தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என அறிவித்தோம். அதற்கு கூட்டணி கட்சியினர், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர். எனவே கூட்டணி கட்சியினர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என தேர்தல் அறிக்கையில் திருத்தி வெளியிட உள்ளோம்.

நான் கருணாநிதியின் மகன். தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் கருணாநிதி நிறைவேற்றினார். அது கருணாநிதியின் பாதை. இது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் பாதை. அதேபோல நானும் நிறைவேற்றுவேன். அதற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக, விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் விருப்பத்தை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story