சங்கத்தை பதிவு செய்யாத அதிகாரிகளை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் - தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு


சங்கத்தை பதிவு செய்யாத அதிகாரிகளை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் - தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 7:36 PM GMT)

சங்கத்தை பதிவு செய்யாத அதிகாரிகளை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எருமாம்பட்டி ஊராட்சியில் கூரம்பட்டி, பட்டனூர், பொன்னுநகர், மாங்குடிநகர், வினாயகபுரம், குட்டியப்பநகர், பூமாலைநகர், தேனோடை நகர் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இப்பகுதிகளில் கடும் வறட்சியாக உள்ளது. தண்ணீர் இன்றி ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு விட்டன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகின்றன. தண்ணீர் இன்றி கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும் 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து கூரம்பட்டி, பட்டனூர் ஏரிகளுக்கு தண்ணீரை மின்மோட்டார் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். மேலும் இதற்காக சங்கம் ஒன்றை ஆரம்பித்து அதற்குரிய ஆவணங்களுடன் அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சங்கத்தை பதிவு செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறியும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்தும் 18 கிராம மக்களும் நேற்று காலிக்குடங்கள், ரேஷன்கார்டு, ஆதார் அட்டைகளுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, தென்பெண்ணை ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.2 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக கிராம மக்கள் சார்பில் ரூ.1 கோடி வழங்க முடிவு செய்து, இதற்கான சங்கத்தை ஆரம்பிக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்தோம். ஆனால், பொதுப்பணித்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று பதிவு செய்ய வேண்டும் என கூறி சங்கத்தை பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியால் காவக்கரையில் இருந்து டிராக்டர் தண்ணீர் ரூ.700 முதல் ரூ.ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்களது சங்கத்தை முறைப்படி பதிவு செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம் என்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story