தர்மபுரி, கடத்தூர், அரூரில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் - கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு


தர்மபுரி, கடத்தூர், அரூரில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் - கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 8:16 PM GMT)

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் டாக்டர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆ.மணியும், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கிருஷ்ணகுமாரும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தர்மபுரி, அரூர்(தனி) கடத்தூர் ஆகிய 3 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்இளங்கோவன், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டங்களில் மாநில நிர்வாகி கீரை விசுவநாதன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், செங்கண்ணன், சண்முகநதி, தேசிங்குராஜன், பேரூராட்சி செயலாளர்கள் முல்லைசெழியன், வடமலை முருகன், மணி, ஜெயச்சந்திரன், உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story