நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை


நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 9:04 PM GMT)

நாகர்கோவிலில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆர்.ஆர்.மக்வானா, பியூஷ் பதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று முன்தினம் இருவரும் நாகர்கோவில் வந்தனர். இவர்களில் ஆர்.ஆர்.மக்வானா கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும், பியூஷ்பதி பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று முதல் தங்களது பணியை தொடங்கினர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் தேர்தல் செலவினம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே, தேர்தல் செலவின பார்வையாளர்கள் மக்வானா, பியூஷ்பதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் ஷரண்யா அரி (பத்மநாபபுரம்), விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), பிரதிக் தயாள் (பயிற்சி), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கரன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் பேசுகையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை துல்லியமாக கணக்கிட வேண்டும். தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், விளம்பர செலவுகளை நாள்தோறும் கணக்கிட்டு உடனுக்குடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாஞ்சில் கூட்ட அரங்கில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தனர்.

Next Story