ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் விற்பனை செய்ய தடை கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவிப்பு


ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் விற்பனை செய்ய தடை கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 7:44 PM GMT)

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த பிரதான தொழிலாக உள்நாட்டு மீன்வளர்ப்பு உள்ளது. உள்நாட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீன பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை மேலும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேப்பியா மற்றும் கொடுவா மீன் குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன் வளர்ப்பு பணி மேற்கொண்டு உரிய வருவாயினை ஈட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்து விடும். ஆகையினால் நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராணவாயுவினை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிக குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப் பெருக்கம் செய்யும் தன்மையுடையது.

இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இன பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பெருக்கமடைய வல்லமை உடையது. மேலும் மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இந்த மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளதாலும், தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பெருக்கமடைந்து ஒரு காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே தடைசெய்யப்பட்டு உள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்படின் அந்த மீன்களை முற்றிலும் அழித்திட அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களும் இந்த வகை மீன்களை கொள்முதல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story