சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் செலவின பார்வையாளர் ஆலோசனை


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் செலவின பார்வையாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 21 March 2019 11:21 PM GMT (Updated: 21 March 2019 11:21 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிப்பதற்காக ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராக தேவ் பிரகாஷ் பமனாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் சேலம் வந்தார்.

நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் செலவின உதவி கணக்குக்குழு அலுவலர்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செலவின பார்வையாளர் தேவ் பிரகாஷ் பமனாவத் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உள்பட அனைவரும் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை வழங்கினார். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தேவ் பிரகாஷ் பமனாவத் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக கண்காணிப்பு மையத்தினை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், ஒற்றை சாளர முறையில் தேர்தல் தொடர்பான பிரசார அனுமதி வழங்கும் அறையினையும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையில் எப்படி பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story