நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்


நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 10:59 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேன்மொழி சேகர் போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானுவிடம் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், நிலக்கோட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக சேகர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவராக இருந்த இவர், தற்போது நிலக்கோட்டை நகர அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக சங்கிலிபாண்டியன் போட்டியிடுகிறார். இவரும், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானுவிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு 1,204 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது அவர் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு ரூ.30 லட்சம் அசையா சொத்துகள் உள்ளன. அவருடைய கணவர் சேகர் பெயரில் வீடு, நிலம் என ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருக்கின்றன. ரூ.22 லட்சம் மதிப்பிலான 2 கார்கள் உள்ளன. மேலும் சேகர் மற்றும் தேன்மொழியின் வங்கி கணக்குகளில் ரூ.25 லட்சம் டெபாசிட் உள்ளதாக வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் அந்த தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கிலி பாண்டியன் தனக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் வீடு, நிலம் இருப்பதாக வேட்புமனுவில் கூறியுள்ளார். 

Next Story